Saturday, April 16, 2011

முன்னும்..... பின்னும்....

காதலுக்கு முன்....

வாய் உதிர்க்கும்
சப்தங்களுக்கும்
அர்த்தம் புரியாது
அவனுக்கு....

காதலுக்குப் பின்...

அவளின்
மெளனத்திற்கும்
நீண்ட உரை
எழுத முடிகிறது..

Friday, April 1, 2011

“அவன் குடிகாரன்”


எந்தக் கடவுளிடமும்
வரம் ஒன்றும்
கேட்கவில்லை
குடிகாரனாகப்
பிறக்க வேண்டி

 கல்லூரியிலோ
பல்கலைக் கழகத்திலோ
பரிட்சை எழுதி
பெறவில்லை
குடிகாரன்
என்ற பட்டத்தை

கண்டிப்பாக
குடிக்க வேண்டி
நிர்ப்பந்திக்க
காதல் தோல்வியும்
வரவில்லை
கடன் தொல்லையும்
எனக்கில்லை

எந்த மாதுவையும் நான்
நினைத்ததில்லை
அதனால் தானோ
மதுமகள் அன்பாய்
என்னை
அணைத்துக்கொண்டாள்

விலக்க முடியாத
அவள் இரும்புக் கரத்தில்
சிறைபட்டு
தள்ளாடிகொண்டிருக்கிறேன்
“அவன் குடிகாரன்”
என்றநற்சான்றிதழுடன்

நட்புக்குக் துணையாக்
கோப்பைக்குக் கரம் கொடுத்த
ஒரே
காரணத்தால்!!